நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம். நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

நம்மைப் போல் தான் மற்றவர்களும் பிறர் மீது நல்ல எண்ணமோ, கெட்ட எண்ணமோ கொண்டு இருப்பார்கள் என்று நாம் நினைத்துப் பார்ப்பது இல்லை..

ஒருவரின் உருவத்தை வைத்து மதிப்பிடு செய்யக் கூடாது. “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு, அச்சாணி அன்னார் உடைத்து என்பது குறள்.

உருளுகின்ற பெரிய தேருக்கு, அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அதனால் ஒருவரது உருவின் சிறுமையைக் கண்டு நாம் இகழக் கூடாது என்றார் வள்ளுவர்.:

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை, நிறை இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது..

ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளிநாட்டிற்குப் பயணம் செய்தார். அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.

கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.

அவர் பார்ப்பதற்கு கொடூரமான ஆளாக அவருக்குத் தெரிந்தார். மற்றும் அந்த ஆள்  வாட்டசாட்டமாகவும், கரு,கருவென்றும் காட்சி அளித்தார்

வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்குச் சென்று பொறுப்பாளரிடம், இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன்இருப்பவர் நம்பிக்கைக்கு உரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.

பெட்டகக் காப்பாளர் சொன்னார்.

''பரவாயில்லை, கொடுங்கள்..நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று, உங்கள் அறையில் உங்களுடன் வந்து இருப்பவரும், சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி, அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்து இருக்கச் சொல்லிச் சென்றுள்ளார்.'' என்றார்.*

ஆம்.,நண்பர்களே.,

எப்போதும் நாம் ஒரு பொருளை,அல்லது மனிதர்களின் உருவத்தை வைத்தே எடை போடுகிறோம். அது மிகவும் தவறானது..

ஒருவருடைய மதிப்பு செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்பட வேண்டுமேயொழிய.  அவர் உருவத்தை வைத்து அல்ல