சக்ரவர்த்தியான நிமி மறுபடி ஒரு கேள்வி கேட்டார்.
பகவானை எப்போது ஆராதிக்கவேண்டும்? அதன் விதிமுறைகள் என்ன? அவருக்கு என்னென்ன பெயர்கள் உள? என்ன வடிவத்தில் என்ன நிறத்தில் இருப்பார்?

ஒன்பதாவது யோகியான கரபாஜனர் பேசத் துவங்கினார். 
க்ருதயுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களிலும் பகவானுக்கு வெவ்வேறு நிறங்கள், பெயர்கள், மற்றும் பூஜை முறைகள் உள்ளன.

அந்தந்த யுகத்தின் மக்களின் மனோபாவத்திற்கேற்றபடி பகவானின் நிறம், வடிவம், பூஜை முறைகள் மாறுபடுகின்றன.

க்ருதயுகத்தில் நான்கு கரங்கள், ஜடாமகுடம், மரவுரி, கறுப்பு மான்தோல், உபவீதம், ருத்ராக்ஷமாலை, தண்ட கமண்டலம் ஆகியவைகளுடன் வெண்மை நிறத்தில்‌ காட்சியளிக்கிறார். 

அந்த யுகத்தில் மனிதர்கள் மிகவும் அமைதியான ஸ்வபாவம் கொண்டவர்கள், பகையின்றி, அனைவரையும் சமமாகப் பார்ப்பார்கள். புலனடக்கம் அவர்களின் சொத்தாக இருந்தது. தியான மார்கம் அவர்களுக்கு சுலபமாகக் கைகூடிற்று.

ஹம்ஸர், ஸுபர்ணர், வைகுண்டர், தர்மர், யோகேஸ்வரர், மேலர், ஈஸ்வரர், புருஷர், அவ்யக்தர், பரமாத்மா ஆகிய பெயர்களால் வழங்கப்பட்டு வந்தார்.

திரேதா யுகத்தில் பகவான் சிவப்பு நிறம் கொண்டு விளங்குகிறார். நான்கு கைகள், வயிற்றில் மூன்று மடிப்புகள், தங்கநிறை சிகை, வேதமே உருவானவர், வேள்விக்குப் பயன்படும் ஸ்ருக், ஸ்ருவம் என்ற கருவிகளைக் கைகளில் வைத்திருப்பார்.

பகவான் ஸ்ரீஹரியைப் மூன்று வித வேத விற்பன்னர்களும் ப்ரும்ம விசாரம் செய்பவர்களும் வேதங்களாலேயே துதிக்கிறார்கள்.

விஷ்ணு, யக்ஞர், ப்ருச்னிகர்பர், ஸர்வதேவர்,‌ உருக்ரமர், வ்ருஷாகபி, ஜயந்தர், உருகாயர், ஆகிய பெயர்கள் அவருக்கு உண்டு.

துவாபரயுகத்தில் பகவான் பச்சைவண்ணராக விளங்குகிறார். பட்டாடை, சங்கு, சக்ரம், கதை, மார்பில் ஸ்ரீவத்ஸம், கௌஸ்துப மணி ஆகியவற்றுடன் காணப்படுகிறார்.

ஒரு பேரரசர் போல் விளங்கும் இவரை, வேததந்திர முறைப்படி வணங்குகிறார்கள்.
வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், நர நாராயணர், விஸ்வேஸ்வரர், விஸ்வரூபர், ஸர்வபூதாத்மா ஆகிய பெயர்களைச் சொல்லி வழிபடப்படுகிறார்.