சௌனகர் கேட்டார்
ஸூதரே, பரம பக்தரான விதுரர் யுத்தத்தைக் காண சகியாமல், தீர்த்த யாத்திரை சென்றாராமே. அப்போது மைத்ரேய மஹரிஷியை சந்தித்தார் என்று கூறினீர்களே.

இருவருக்கும் பகவத் விஷயமாக ஏதாவது உரையாடல் நடந்ததா?

ஒரே தெய்வத்தை வழிபடும் இரு பக்தர்களோ, ஒரே குருவை அடைந்த உண்மையான சீடர்களோ சந்தித்தால் வேறென்ன பேசுவார்கள்?

அவர்களது தெய்வத்தைப் பற்றியே அவர்களது பேச்சு இருக்கும். அவர்களின் உரையாடல் எங்கு நடந்தது?
விதுரர் எதற்காக சுற்றத்தை வெறுத்துக் கிளம்பினார்?

ஸூதர் சொன்னார்
இதே கேள்வியை பரிக்ஷித்தும் கேட்டார். அதற்கு ஸ்ரீ சுகர் கூறிய பதிலையே உங்களுக்குச் சொல்கிறேன்.

ஸர்வேஸ்வரனான இறைவன் ஸ்ரீ க்ருஷ்ணன் பாண்டவ தூதனாக அஸ்தினாபுரம் சென்றான்.

அப்போது துரியோதனன் என் வீட்டிலோ அல்லது விருந்தினர் மாளிகையிலோ தங்கலாமே என்றழைத்தான்.

தூது வந்த இடத்தில் கை நனைக்கலாது என்று சொல்லிவிட்டான் கண்ணன். த்ரௌபதியை மானபங்கம் செய்யும் சமயத்தில் வாளாவிருந்ததால், பீஷ்மர், த்ரோணர் போன்றவர்கள் மீதும் அவனுக்கு வருத்தம் இருந்தது.

யார் வீட்டில் தங்கலாம் என்று யோசித்துக்கொண்டு ராஜவீதியில் இறங்கி நடந்தான்.

பகவான் வீதியில் நடப்பதைக்கண்டு அவன் பின்னால் அனைவரும் வந்தனர். முதலில் வெள்ளை வெளேரென்ற பளிங்கு மாளைகை வந்ததும்

இது யார் வீடு?

பீஷ்மர் முன் வந்து என் வீடுதான் கண்ணா.. உள்ளே வா என்றழைத்தார்.
பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நடந்தான்.

அடுத்து வந்த மாளிகையை துரோணர் தன் வீடென்று அழைத்தார். கர்ணனுக்கும் ஆசை. அவனும் தன் மாளிகையைக் கடக்கும்போது கூப்பிட்டுப்பார்த்தான். கண்ணன் பிறகு வருகிறேன் என்றதும் திட்டினான்.

வரிசையாக ஒவ்வொரு வீட்டையும் கடந்து சென்று கொண்டே இருந்தான். எங்கேதான் தங்கப்போகிறான் என்ற ஆவல் அனைவர்க்கும் மேலிட்டது.

அப்போது மிகச் சாதாரணமாக அந்த சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல் ஒரு பழைய ஓட்டுவீடு வந்தது.

இது யார் வீடு?

இது உன்னுடைய வீடுதான் கண்ணா..
என்றார் விதுரர். அந்த வீடு கண்ணனுக்கு கோகுலத்து வீட்டை நினைவு படுத்தியது போலும். மிகவும் மகிழ்ந்துபோன கண்ணன், ஆ.. என் அம்மா யசோதைக்குத்தான் என்மீது எவ்வளவு அன்பு. நான் எங்கு போனாலும் அவ்விடத்தில் நான் வசிக்க ஒரு வீடு கட்டி வைத்திருக்கிறாளே..

நான் இன்று இங்கேயே தங்குகிறேன். என்று சொல்லி அவனது சொந்த வீட்டிற்குள் நுழைவதுபோல் உள்ளே போனான்.

குந்தியும் விதுரர் வீட்டில்தான் தங்கியிருந்தாள். அப்படிப்பட்ட பக்தர் விதுரர் பகவான் எழுந்தருளிய அந்த வீட்டை விட்டுச் சென்றாரே..

அவர் மைத்ரேயரைச் சந்தித்துப் பேசிய உரையாடலை சான்றோர்கள் கொண்டாடுகிறார்கள். அந்த உரையாடலைக் கூறுங்கள் என்றார் பரிக்ஷித்.

ஸ்ரீ சுகர் சொன்னார்
மறுநாள் பகவான் அவைக்குச் சென்றபோது, அவன் கூறிய நல்லுரைகள் அனைத்தும் குருடனான த்ருதராஷ்ட்ரனுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. அப்போது விதுரர் எழுந்து பல நல்லுரைகளைக் கூறினார்.

அவையே விதுர நீதி என்று பெரியோரால் போற்றப்படுகிறது. விதுரர் சொன்னார்,
அண்ணா!
துரியோதனன் பிறந்தபோதே உங்களுக்குக் கூறினேன்.
இவன் கலிபுருஷனின் அவதாரம். இவனால் நாடு கெட்டுப்போகும்.

குலம் விளங்க ஒருவனைத் தள்ளலாம். கிராமம் விளங்க ஒரு குடும்பத்தைத் தள்ளலாம்.

நாடு விளங்க ஒரு கிராமத்தையே அழிக்கலாம். ஆத்மாவை உணர உலகையே துறக்கலாம்.

துரியோதனன் மீது புத்ரபாசம் வேண்டாம். நாடு கடத்துங்கள் அல்லது கொன்று விடுங்கள் என்று சொன்னேன்.
இவனை இப்போதே விலக்கிவிட்டு கண்ணன் சொல்வதைக் கேளுங்கள் என்றார்.

உடனே துரியோதனன், வெகுண்டு எழுந்து விதுரரைப் பார்த்து ஆத்திரத்துடன், வேலைக்காரியின் மகனான இவனை யார் சபைக்கு அழைத்தது? நாம் போடும் சோற்றை உண்டு நமக்கெதிராகப் பேசுகிறான். இவனை நாடு கடத்துங்கள் என்று கத்தினான்.

அதைக் கேட்டு த்ருதராஷ்ட்ரன் பேசாமல் இருக்கவே, விதுரர், இதுவும் பகவானின் லீலை என்று உணர்ந்து, சிறிதும் கலக்கமின்றி, கோட்டை வாசலில் வில்லை வைத்துவிட்டு‌ அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினார். கௌரவர்கள் செய்த புண்ணியங்களின் பலன் அன்றே தீர்ந்தது.

தன் ப்ரியனான பகவான் எங்கெல்லாம் அர்ச்சாவதாரமாய் எழுந்தருளியிருக்கிறாரோ அங்கெல்லாம் செல்ல மனம் கொண்டு தீர்த்த யாத்திரை கிளம்பினார் விதுரர்.